சிந்திக்க வேண்டிய விஷயம்:
“ஒரு ஐரானிகல் ஆட்டிட்யூட் இயங்க ஒரு பிரமாதமான சாதனையைத்தான் புதுமைப்பித்தன் இலக்கியப் படைப்பில் காட்டியிருக்கிறார். தமிழ்ச் சிறுகதை உலகில் அவருக்கு நிச்சயம் ஒரு ஸ்தானம் உண்டு. இலக்கியப் பார்வை என்பதில் ‘ஐரானிக் ஆட்டிட்யூட்’க்கு எந்த மதிப்பு என்பது விமர்சனத்திற்கு உரியது. அவர், க.நா.சு. சொல்கிறபடி அவருடைய ‘ஐரானிக் ஆட்டிட்யூட்’ இயங்கிப் பிரமாதமான சாதனை காட்டினாலும் ஒரு பூரண இலக்கியத்தன்மை உருப்பெறாத அளவில் ‘ஒரு மேதையைத் தமிழ்நாடு இழந்தது’ எனக் கொள்வது சரி. (‘ஐரானிக் ஆட்டிட்யூட்’டில் பூரண இலக்கியத்தன்மை உருப்பெற முடியாது என்ற சித்தாந்தம் இதைவிட ஓர் உயரிய ‘ஆட்டிட்யூட்’ இருக்கிறது என்பதைக் குறிக்கும். அதில் யாராவது இருக்கிறார்களா என்பதையும் விமர்சகர்கள்தான் கூறவேண்டும்). க.நா.சு. ஒருவரின் மதிப்பீட்டை ஒருவகையில் சரி என ஒப்புக் கொள்கிறேன். ”மேதைத்தன்மையும், கலையில் ஒரு பூரணத்துவம் காண முடியாதபடிக்கும், அவருடைய தனித்துவம் காட்ட முடியாதபடியும் ஆனதற்குக் கலையாக்குவதிலும், கட்டுப்பாட்டிலும் அவர் நம்பிக்கையற்ரவராக இருந்துவிட்டதினால்தான்” என்பதை நான் வேறு ஒரு வகையாகக் காண்கிறேன். அவர் ஐரானிக் ஆட்டிட்யூட்டில் இலக்கியம் படைத்ததனால் என்று கொள்ளும்படி எனக்குத் தோன்றுகிறது. இலக்கியப்படைப்பில் ஐரானிக் ஆட்டிட்யூட்தான் சிறந்ததெனச் செயல்பட முடியுமென்பது முடியாது. இந்தப் போக்குப் புத்தியைச் சார்ந்தது என்றும் மனதை சார்ந்து முழுமனிதன் செயல்பட இடம்கொடுக்க முடியாதென்பதையும் நான் ஒருவகையில் உணர்கிறேன். புதுமைப்பித்தனுக்கு இந்த மாதிரியான உணர்வும் அடிக்கடி தோன்றியிருக்கலாம். என்னைப் பற்றிய அவருடைய மதிப்பீடு வாசகங்களினூடே அதை நான் அனுமானிக்கிறேன். ஐரானிக் ஆட்டிட்யூட்டில் உயர்வகை இலக்கியம் ஒருவகையில் முடியும் என்பதைப் புதுமைப்பித்தனைப் போல எழுதும், எழுத ஆசை கொள்ளும் அநேக படைப்பாளிகளின் தரத்தை உணரும்போது நமக்கு விளங்கும். ஐரானிக் ஆட்டிட்யூட் இலக்கிய மதிப்பு ஒருவகையில் ரிலேட்டிவ் ஆகத்தான் இருக்க முடியும். அவர் கதைகளில் காணும் ஒரு அதிசய பிரமிப்பு முழுதும் பூர்த்தியாக செயல்பட முடியாதவாறு அனுபவமாவதில், இன்னும் சிறிது காலம் இருந்து அவர் ‘போஸ்’ என இந்த ஆட்டிட்யூட் மாறி வேறுவிதமான இலக்கியம் படைத்திருப்பாரோ எனவும் நினைக்க வேண்டியிருக்கிறது. சமய சந்தர்ப்பம் சூழ்நிலை இவைகளின் நிமித்தம் உண்டாகி ஒரு ‘போஸ்’ எனத் தோன்றியது. விடாது பிடிக்கும் நிலைமை அடைந்து அதை விட்டு விலக முடியாது. மேலும் சூழ்நிலையும் சந்தர்ப்பமும் இந்த நோக்கிற்குச் செயல்படுகிறது என்றும் சொல்லலாம்”
"